
சினோபாம் தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 6 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அந்த தடுப்பூசிகளை 3 இலட்சம் பேருக்கு செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் பூனேயில் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் இரண்டாம் கட்ட செலுத்துகை அண்மையில் ஆரம்பமானது.
எவ்வாறாயினும், முதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் சுகாதார தரப்பிடம் தடுப்பூசிகள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொவிட்-19 பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் பலவற்றுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணிகள் சவாலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.