
இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைய தினம் கொவிட்-19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
அத்துடன், பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 காவல்துறை பிரிவுகளால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
அத்தோடு இன்றும் பலருக்கு தடையுத்தரவு பெறுவதற்கு காவல்துறை ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.