ஓகஸ்ட் 6 ஆம் திகதியின் பின்னர் நிகழவுள்ள மாற்றம்

ஓகஸ்ட் 6 ஆம் திகதியின் பின்னர் நிகழவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர், அநீதியான முறையில் அமுலில் இருக்கும் எரிபொருள் விலைகள் குறைப்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கம் ஒன்றின் பிரதிநிதிகள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் மின்வலு, எரிசக்தி அமைச்சராக இருந்தேன். நாங்கள் 12 நாட்களில் பெற்றோல், டீசல், மண்எண்ணெய் விலைகளை குறைத்தோம். ராஜபக்சவினர் எரிபொருளுக்கு விதித்துள்ள வரிகளை கட்டாயம் நாங்கள் குறைப்போம். குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்களுக்கு கட்டாயம் மானியம் வழங்குவோம். எந்த குறைப்பும் இன்றி அரச ஊழியர்களுக்கு நாங்கள் அதிகரித்த முழு சம்பளத்தையும் வழங்குவோம். அதேபோல அதிகரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவும் வழங்கப்படும். அத்துடன் எந்த ஊழியர்களையும் வேலைகளில் இருந்து வெளியேற்ற மாட்டோம். அவர்களை அரசாங்கம் பராமரிக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.