
அனைத்து வகையான லன்ச்ஷீட்களையும் தடை செய்ய நடவடிக்கை!
அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விரைவில் உக்கக்கூடிய தன்மையுடைய லன்ச்ஷீட்களை அறிமுகப்படுத்துவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தற்போது உலகில் எந்தவொரு நாடும் லன்ச்ஷீட்களை பயன்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கும் அமைச்சர், லன்ச்ஷீட்டுகளை பயன்படுத்தும் ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே எனவும் தெரிவித்தார்.
வருடாந்தம் 106 டன் லன்ச்ஷீட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கமைய 10 மில்லியனுக்கும் அதிகமான லன்ச்ஷீட்கள் நாளாந்தம் வீசப்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.