வெற்றிக் களிப்பில் காலணியில் குளிர்பானம் ஊற்றிக் குடித்த அவுஸ்திரேலிய வீரர்கள் (காணொளி)

வெற்றிக் களிப்பில் காலணியில் குளிர்பானம் ஊற்றிக் குடித்த அவுஸ்திரேலிய வீரர்கள் (காணொளி)

இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணியில் சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.

173 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோர்னர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 38 பந்துகளில் 53 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை வென்றது.

வெற்றிக்குப் பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அணியின் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட் மற்றும் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவரும் தமது காலணியில் குளிர்பானம் ஊற்றிப் பருகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது காலணியில் குளிர்பானம் ஊற்றிப் பருகிய புகைப்படம் மற்றும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.