
1,908 பேருக்கு காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை!
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறுபவர்களை கண்டறியும் வகையில் நேற்று (12) மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தவும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த விசேட நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளில் பயணிப்பவர்கள் முறையாக முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்படி 2,961 உந்துருளிகளும், 2,721 முச்சக்கர வண்டிகளும் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மொத்தமாக 8,138 நபர்கள் சோதனையிடப்பட்டனர்.
இந்த சோதனையின் போது சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1,908 பேர் காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.