
சிகிச்சைக்காக வந்த பெண்ணின் வாழ்வை சீரழித்த வைத்தியர் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நீர்கொழும்பு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த சீதுவ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீர்கொழும்பு மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான மருத்துவரை இளம் பெண் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த இந்த இளம் பெண், அப்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெறும் போது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் மார்ச் 31 ஆம் தேதி பதிவாகியுள்ளது.
அதன்படி, மறுநாள், அந்த இளம் பெண் இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மருத்துவமனையின் நிர்வாகத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் தொடர்பாக நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் சுகாதார அமைச்சு தனித்தனி விசாரணைகளை மேற்கொண்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையையும் விதிக்கப்பட்டது.
மேலும், சந்தேகத்திற்குரிய வைத்தியர் சுமார் 2 மாதங்களாக, தலைமறைவாக இருந்ததுடன் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதன் போது வைத்தியரை 02 வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்பின் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.