
இந்தியாவில் ஒரே நாளில் 7,350 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,777 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 97 ஆயிரத்து 860 ஆக உயர்ந்தது.
கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 56 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 8.5 சதவீதம் குறைவு ஆகும்.
மேலும், ஒரு வாரபாதிப்பு 56 ஆயிரமாக குறைந் திருப்பது கடந்த 19 மாதங்களில் முதல் முறை ஆகும்.
கடந்த ஒரு வாரத்தில் கேரளா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளத்தில் 10 முதல் 16 சதவீதமும் கர்நாடகாவில் 6.5 சதவீதமும் குறைந்துள்ளது. அதேநேரம் மராட்டியத்தில் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல குஜராத், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், அரியானா, மத்திய பிரதேசத்தில் ஒருவார பாதிப்பு சற்று உயர்ந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 143 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 202 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,75,636 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 7,973 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 91,456 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 561 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 19,10,917 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 133 கோடியே 17 லட்சத்தை கடந்துள்ளது.
விடுமுறை நாளான நேற்று 8,55,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 65.66 கோடியாக உயர்ந்துள்ளது.