இலங்கை கிரிக்கெட் அணியின் 'பந்துவீச்சு மூலோபாய' பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் 'பந்துவீச்சு மூலோபாய' பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமனம்

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், லசித் மாலிங்கவின் நியமனம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

லசித் மாலிங்க, தமது குறுகிய கால வகிபாகத்தில், தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, வீரர்கள் மூலோபாய திட்டங்களை களத்தில் செயற்படுத்த உதவுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.