
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் சாவு- கணவர், உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 28). மாற்று திறனாளியான இவர் வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கும் தருமபுரி மாவட்டம் மூப்பனூர் ஓலைப்பட்டியை சேர்ந்த கனகா (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில நாளுக்கு முன் கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற கனகா நேற்று முன்தினம் சின்னகவுண்டாபுரம் திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று கனகா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் கனகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
சாவில் சந்தேகம்
இதற்கிடையே கனகாவின் தாய் லட்சுமி அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்த பரிந் துரைத்தனர்.
இதையடுத்து கனகாவின் கணவர் ராஜேந்திரன் மற்றும் மாமானார், மாமியாரிடமும் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தினார்.