
3 தமிழக பெண்களுக்கு ‘பெண் சக்தி’ விருது- ஜனாதிபதி இன்று வழங்குகிறார்
பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ‘நாரி சக்தி புரஸ்கார்’ எனப்படும் ‘பெண் சக்தி’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ந்தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து சர்வதேச மகளிர் தினமான இன்று, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதுகள் வழங்கப்பட்டது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 பெண்களுக்கு இந்த விருதை வழங்கினார்.
விவசாயம், சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல், கண்டுபிடிப்பு, தொழில் உள்ளிட்ட சிறந்த பங்களிப்பை அளித்த பெண்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும், மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும் வழங்கப்பட்டது.
இவர்களில் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் நீலகிரியை சேர்ந்தவர்கள். இவர்கள் பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்கி வருகிறார்கள்.
டாக்டர் தாரா ரங்கசாமி சென்னையில் உள்ள ஸ்கி சோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் பெண் சக்தி விருது பெறும் பெண்களிடம் பிரதமர் நரேந்திரமோடி நேற்று கலந்துரையாடினார். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரைகளை பதித்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
சமூக தொழில் முனைவோர் அனிதா குப்தா, பழங்குடியின ஆர்வலர் உஷா பென் தினேஷ்பாய்வாசவா, கடற்படை கேப்டன் ராதிகா மேனன், இன்டெல் இந்தியா தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய் மாற்றுத்திறனாளி கதக் நடன கலைஞர் சைவி நந்த்கிஷோர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.