மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் மீண்டும் பாம்பு பிடிக்க புறப்பட்ட வாவா சுரேஷ்

மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் மீண்டும் பாம்பு பிடிக்க புறப்பட்ட வாவா சுரேஷ்

சரியாக ஒரு மாதத்திற்கு முன் ராஜ நாகம் ஒன்றிடம் கடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷ், மீண்டும் பாம்பு பிடிக்க துவங்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ், உபகரணங்களின் உதவியின்றி பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். அவர் ஜனவரி மாதம் 31ஆம் திகதி கோட்டயத்தில் ராஜநாகம் ஒன்றைப் பிடித்து கோணிப்பை ஒன்றில் அடைக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த நாகம் அவரது தொடையைக் கவ்விப்பிடித்தது.

அதனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சுரேஷ், அதை கோணிப்பையில் அடைத்த நிலையில் மயங்கிச் சரிய, அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்.

 

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், எட்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பிப்ரவரி மாதம் 7ஆம் திகதிதான் வீடு திரும்ப முடிந்தது.

இந்நிலையில், ராஜநாகம் கடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் பாம்பு பிடிக்க புறப்பட்டுள்ளார் சுரேஷ்.

நேற்று முன்தினம் (மார்ச் 6ஆம் திகதி), ஆலப்புழாவிலுள்ள ஒரு வீட்டில், மோட்டார் சைக்கிள் ஒன்றில் மறைந்திருந்த நாகப்பாம்பு ஒன்றை அவர் பிடித்து பிளாஸ்டிக் போத்தல் ஒன்றிற்குள் அடைப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், சுரேஷ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், இனி சுரேஷை பாம்பு பிடிக்க அழைக்கக்கூடாது என வனத்துறை அலுவலர் ஒருவர் மக்களிடம் கூறிவருவதாகவும், ஆனாலும், மரணம் வரை பாம்பு பிடிப்பதை தான் நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் சுரேஷ்.

அத்துடன், இனி கூடுதல் கவனத்துடன் பாம்புகளைப் பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார் அவர்.