முறையற்ற பந்துவீச்சு விவகாரம்: ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் உட்பட மூவருக்கு அபராதம்

முறையற்ற பந்துவீச்சு விவகாரம்: ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் உட்பட மூவருக்கு அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக ஜோஸ் பட்லர் 116 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

223 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது.

இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு இறுதி ஓவரில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் ஓபெட் மெக்காய் வீசினார்.

கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் துடுப்பாட்ட களத்தில் இருந்த ரோவ்மேன் பவல் சிக்சர் விளாசினார்.

3ஆவது பந்து ரோவ்மேன் பவலின் இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார்.

ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர் ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியே வருமாறு சைகை காட்டினார்.

களத்தில் இருந்த நடுவரிடம் சென்று டெல்லி அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் இதுகுறித்து முறையிட்டார்.

இதனையடுத்து இதற்கான முடிவு மூன்றாம் நடுவரிடம் சென்றது.

அதனை மீள் பரிசீலினை செய்த மூன்றாம் நடுவர் அது முறையற்ற பந்துவீச்சு இல்லை என அறிவித்தார்.

இதனையடுத்து மிகுதி இருந்த மூன்று பந்துகளில் 18 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தாலும், ஓபெட் மெக்காய்யின் பந்துவீச்சு சிறப்பாக அமைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப்  பண்டுக்கு போட்டி கட்டணத்தில் 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷர்துல் தாகூருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100வீதம் அபராதமும் ஒரு போட்டிக்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.