இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? நாளை கடைசி ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? நாளை கடைசி ஆட்டம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. பும்ராவின் அபாரமான பந்து வீச்சும், ரோகித்சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும் எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.

ஆனால் 2-வது போட்டியில் இந்திய வீரர்கள் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 247 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 146 ரன் வித்தியாசத்தில் சுருண்டு 100 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது.

இதில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டயா, ஜடேஜா, ரோகித்சர்மா, தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமாகும்.

முதல் ஆட்டத்தில் மோசமாக ஆடிய பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அதில் இருந்து மீண்டு 2-வது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வேட்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.

கடந்த போட்டியில் இந்தியாவின் சரிவுக்கு வேகப்பந்து வீரர் ரீஸ் டாப்லே காரணமாக இருந்தார். அவர் நாளைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக திகழ்வார்.

கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 105 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 56-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிசன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.