வாழைச்சேனை வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்ததாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய உணவினை கொள்வனவு செய்யும் முகமாக உந்துருளியில் சென்றவேளை பின்னால் பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர் சடலம் உடற் கூராய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை காவல்துறையினருக்கு வழங்கினார்.
விபத்திற்குள்ளான பாரவூர்தி வாகனம், உந்துருளி என்பன காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.