அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிபர்களும் ஆசிரியர்களும் என்ன பிரச்சினை காணப்பட்டாலும் அதனை பொறுத்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், நாட்டிக்காகவும் சேவையாற்ற வேண்டும் என மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிறி பியதாச ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் ஹட்டன் கல்வி வலயம் இணைந்து அபியச எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை ஒன்று (06) திகதி ஹட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது இந்த நிகழ்வில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தில் நகர்புற பாடசாலைகளில் பலர் 10 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றுகின்றனர்.

இன்னும் சிலர் மேலதிகமாக உள்ளனர். ஆகவே இடமாற்ற சபைகள் ஊடாக அவர்களை அப்பாடசாலையிலிருந்து எடுத்து ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற பாசாலைகளுக்கு வழங்க உள்ளதாகவும், அதிக கஸ்ட பாடசாலைகளில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நகர் பாடசாலைகளில் சேவையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த வருடம் வீழ்ச்சி கண்ட ஹட்டன் கல்வி வலயத்தினையும் மத்திய மாகாணத்தில் பின்னடைந்த ஏனைய வலயங்களையும் கல்வி முன்னேற்றம் காண்பதற்கு விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அதன் ஒரு அங்கமாக அபியச என்ற நடமாடும் சேவையினை இன்று நடத்தி வருவதாகவும், மாணவர்களை இனங்கண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பண்மிக்க கல்வியினை பெற்றுகொள்வதற்கு சில்பாலோக்க எட்லஸ் போன்ற கல்வித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின் மூலம் இடம் மாற்றம் அபிவிருத்தி, திட்டமிடல், ஒழுக்காற்று நடவடிக்கைகள், சேவை நிரந்தரமாக்கல், விடுமுறை, ஆசிரியர் விடுவிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 16 விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இன்றைய தினம் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நடமாடும் சேவையில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினை சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹட்டன் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நடமாடும் சேவை இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரை அதிபர் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்வி அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.