
கொரோனா வைரஸ்: தீவிர வலதுசாரிகளால் ரோமில் இடம்பெற்ற எதிர்ப்பு வன்முறையாக மாறியது
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அரசாங்கத்தின் பதில் தொடர்பாக இத்தாலிய தீவிர வலதுசாரி உறுப்பினர்களும் தீவிர கால்பந்து ரசிகர்களும் நடத்திய பேரணி வன்முறையாக மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி அதிகாரிகளை இராஜினாமா செய்யுமாறு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தலைநகர் ரோமில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின்போது ஆர்பாட்டக்கார்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கியதில் இருந்து 33,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 234,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இத்தாலி உலகின் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.