ட்ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு!
நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில் நேற்று (21) மாலை ஹைலெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கொள்கலனை ஏற்றிச் சென்ற ட்ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொஸ்கமவில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், அவிசாவளையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த கொள்கலன் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக கொள்கலன் வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதினால் தொலைபேசி கம்பம் களனிவெளி ரயில் பாதையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையின் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் வாகனத்தின் சாரதி கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.