அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும், படிப்படியாக இன்று நள்ளிரவில் ஒரு பலத்த காற்றாக உருவாகும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, 7-15 வடக்கு அட்சரேகை மற்றும் 62-68 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிமீ முதல் 75-80 கிமீ வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.