
வீதியில் சென்ற இளைஞனை தாக்கிய காவல்துறையினர் - யாழில் சம்பவம்..!
யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(15) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி, மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள காவல்துறை வீதிச் சோதனைசாவடியில் கடமை யில் இருந்த யாழ்ப்பாணப் காவல் நிலையத்தின் இரு போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞரை மறித்துள்ளனர்.
இவ்வாறு மறித்த காவல்துறையினர் அந்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் திறப்பினை பறிமுதல் செய்ததுடன், அங்குள்ள சோதனைச்சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டனர்.
இதற்கு அந்த இளைஞன் தன்னிடம் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து ஆவணங்களும் உள்ளது என்றும், அதனை காண்பிக்கும் முன் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிள் திறப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.
இந்நிலையில் திறப்பை கொடுக்க மறுத்த காவல்துறையினர், அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சோதனை சாவடிக்குள் இழுத்து செல்ல முற்பட்டதோடு, அவரை கைது செய்யவும் முயன்றனர்.
இதனால் காவல்துறையினருக்கும், குறித்த இளைஞருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொது மக்கள் அவ் இளைஞரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். எனினும், அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பொது மக்கள் முன்பாக இடம் பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு கூடிய பொது மக்கள் அவ் இளைஞரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
எனினும், அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதேவேளை, காவல்துறையினர் அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தவர்களையும் கைது செய்ய முற்பட்ட காவல்துறையினர், அந்த காணொளிகளை அழித்த பின்னர் அவர்களை விடுவித்தனர்.