
பாழடைந்த கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிள் - யாழில் சிக்கிய பலநாள் திருடன்...
யாழ். மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாழடைந்த கட்டடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சிவன் கோவிலில் வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்துவிட்டுள்ளார். தலைக் கவசத்தையும் விட்டுச்சென்றுள்ளார்.
வழிபாடு முடித்து வீடு திரும்ப முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்றதடுப்பு காவல்துறையினர் பண்டதரிப்பைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
பாழடைந்த கட்டடத்துக்குள் மறைத்து விடப்பட்டிருந்த திருடிய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பளை, கொடிகாமம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபர் நேற்றையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.