கடந்த 24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு -அதிர்ச்சியளிக்கும் காவல்துறை தகவல்..!
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்களே இவ்வாறு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணிநேரங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு துன்புறுத்தல் அல்லது வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள் 14, 15, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
பதிவாகியுள்ள ஏழு சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் கட்டாயப்படுத்தப்பட்டவை எனவும் மேலும் மூன்று சம்பவங்கள் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியகொட, யடவத்த ஆகிய இடங்களில் இருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.