புத்தளத்தில் கோர விபத்து: துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் பலி..!
புத்தளம்- கொழும்பு வீதியின் தில்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (29.06.2023) பதிவாகியுள்ளது.
பாலாவி பகுதியலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான துவிச்சக்கர வண்டி ஓட்டுனரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் நிந்தனி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மோட்டார் சைக்கிளின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

