தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
ஊவா - குடாஓயா பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற தலைமைத்துவ பயிற்சியொன்றில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பயிற்சியின் போது நேர்ந்த விபத்தொன்றில் உயரிழந்துள்ளார்.
தியத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பொறியியலாளர் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய யசிந்த கிரிஷன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி ஊவா குடா ஓயாவில் நடைபெற்ற பயிற்சிக்கு குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இந்த பயிற்சியின் போது குழுவினர் கயிற்றில் தொங்கிச்செல்லும் (zip lining) விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயற்பாட்டில் இளைஞர் இறுதியாக ஈடுபட்டதுடன், அவரால் அதனை செய்ய முடியாத காரணத்தினால் அவர் ஏரியில் விழுந்துள்ளார்.
இதன்போது சேறும் சகதியுமாக இருந்ததால் நீரில் விழுந்த இளைஞனைக் கண்டுபிடிக்க சுமார் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் எடுத்ததாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து குறித்த இளைஞரை விரைவாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.