
கடற்படையினரின் நில அபகரிப்பிற்கு எதிராக யாழில் நாளை போராட்டம்..!
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் கடற்படையினரின் நில அபகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடைபெறவுள்ளது
கடற்படையினருக்காக காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கையினை எதிர்த்து நாளைய தினம் (12) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் J/07 கிராம சேவகர் பிரிவிற்கு உற்பட்ட, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த இக்காணி அபகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் நாளை புதன்கிழமை (12) ஆரம்பிக்கப்பட இருப்பதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக,ஓர் எதிர்ப்பு போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளை (12) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.