
யாழில் கடற்றொழிலாளர்- அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு: நடந்தது என்ன...!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் நீரியல்வள திணைக்களம் மற்றும் கடற்படையுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் நேற்று (23.07.2023) இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சட்ட விரோதமாக ஒளி பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்து பெருந்தொகையான மீன்களுடன் கடற்றொழிலாளர்கள் சிலர் கடலில் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அந்தவேளை, கடற்படையால் கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை மறைமுகமாக வியாபாரிகளை அழைத்து விற்பனை செய்து அதில் வரும் நிதியை நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும், கடற்படையும், பங்கிடுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் அங்குக் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களது உறவுகளுக்கும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்குமிடையில் பரஸ்பர வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விடையத்தை ஒலிப்பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவர் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அவரை நீரியல் வளத்துறை அதிகாரிகள் புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் பல இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் விற்கப்படும் அதே சமயம் இந்த பணங்கள் சட்டரீதியாக அரசாங்கத்திற்குச் செல்லாமல் இவர்களே பங்கிட்டுக் கொள்வதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இவ்வாறான சட்ட விரோத தொழில்களில் தென் பகுதி கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டபோது பலகாலமாக பார்த்துக் கொண்டிருந்த கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அதே தொழிலில் ஈடுபடுகின்ற போது கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுத்தும் அவர்களைத் துன்புறுத்துவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடற்படை கடற்றொழிலாளர்களை மிக மோசமாக நடத்துவதாகப் பகிரங்கமாகப் பல கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.