உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி விபத்து - சாரதி மரணம்.
பத்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று (29) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கீழ்பிரிவிலிருந்து தோட்ட தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்தையும், விறகையும் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் மலையில் பாதையில் மத்திய பிரிவு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மவுண்ட்வேர்ணன் தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எட்வட் (வயது - 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சாரதியின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
