வெற்றியின் மூன்றில் இரண்டு பங்கை அடைந்த சந்திரயான் 3 விண்கலம்!!

வெற்றியின் மூன்றில் இரண்டு பங்கை அடைந்த சந்திரயான் 3 விண்கலம்!!

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் செலவில் உருவான சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்.வி.எம். 3 .எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம் திக‌தி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக (05.08.2023) சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதாவது இன்று மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. 

 

அத்துடன், ஓகஸ்ட் 23 ஆம் திகதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.