துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் உயிரிழப்பு, 09 பேர் கைது- உத்தர பிரதேசத்தில் சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் உயிரிழப்பு, 09 பேர் கைது- உத்தர பிரதேசத்தில் சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடு வீதியில் வைத்து சுடப்பட்ட ஊடகவியலாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இவரது கொலையுடன் தொடர்புபட்டதாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவரும் விக்ரம் ஜோஷி கடந்த 20 ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவரது இரண்டு மகள்களுக்கு முன்பே இந்த சம்பவம் இடம்பெற்றதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

படுகாயமடைந்த ஊடகவியலாளர் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் இந்தி ஊடகவியாளர்கள் மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில், விக்ரம் ஜோஷியின் மருமகளிடம் சிலர் முறையற்ற விதத்தில் சீண்டியமை தொடர்பில், அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.