
ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ்ப்பாண இளைஞன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!!
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேரந்த தினேஷ் ஞானசூரியன் (வயது 35 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் மூன்று மாதகால விசாவில் சென்னைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறிய குறித்த இளைஞர் கடந்த திங்கட்கிழமை இரவு விமான டிக்கெட், சிறப்பு அனுமதி, எதுவுமின்றி பாதுகாப்பு சோதனை, சுங்கத் சோதனை ஆகிய பகுதிகளை கடந்து குடியுரிமை சோதனை நடக்கும் பகுதிவரை சென்று அங்கு சுற்றித் திரிந்துள்ளார்.
இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றவேளை அவரைப் பிடித்து அடித்த அதிகாரிகள், விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சுற்றித் திரிந்தது பாதுகாப்பு வட்டாரங்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.