
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞனை காணவில்லை - தேடுதல் தீவிரம்!!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞரொருவர் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் சிறிலங்கா கடற்படை மற்றும் காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கிழக்கு 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த 26 வயதுடைய தம்பிப்பிள்ளை விதுசன் என்ற இளைஞரொருவர் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கிழக்கு தீர்த்த கரையில் கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் தெப்பம் ஒன்று நிறுத்தப்பட நிலையில் அது காணாமல் போயுள்ளது. இதனால் அந்த தெப்ப படகில் குறித்த இளைஞர் ஏறி சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நெடுந்தீவிலுள்ள சிறிலங்கா கடற்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இளைஞன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த இளைஞனை கண்டுபிடித்து தருமாறு அவர்கள் ஊடகங்கள் வாயிலாக உதவி கோரியுள்ளனர்.