
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் ஆலய வீதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை (21.08.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், சம்பிரதாயப் பூர்வமாகக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (20.08.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதன்படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று, மங்கள வாத்தியம் சகிதம் கல்வியங்காடு வேல் மடம் முருகன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து வேல் மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை திங்கட்கிழமை (21.08.2023) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுவீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நாளை (21.08.2023) ஆரம்பமாகவுள்ள மஹோற்சவத்தையடுத்து, இன்று (20.08.2023) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து தடையானது எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நடைபெறும் வைரவர் சாந்தி நிகழ்வு நிறைவடைந்த பின்னரே வழமைக்கு திரும்பும் எனவும் யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ். நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ். மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித் தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியைத் தவிர எந்த காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.