
இத்தாலி செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்காவில் கைது..!
போலி வதிவிட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) பிற்பகல் 06.40 மணியளவில் கட்டார் டோஹா நோக்கிப் புறப்படவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணம் செய்வதற்கு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த இளைஞன் சிறிலங்கன் எயார்லைன்ஸ் கவுண்டரில் தனது அனுமதிக்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த குடியிருப்பு விசா போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது கைப்பையை ஆய்வு செய்ததில், குடிவரவு அதிகாரிகள் இரண்டு போலி குடிவரவு முத்திரைகளுடன் மற்றொரு கடவுச்சீட்டு, ஒரு இலங்கை குடிவரவு முத்திரை மற்றும் ஐக்கிய அமீரக ஏர்லைன்ஸின் போலி விமான டிக்கெட் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் குறித்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் போது, 40 இலட்சம் ரூபாவை செலுத்தி தரகர் மூலம் இந்த விசாவை ஏற்பாடு செய்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.