காணாமல்போனோருக்கு நீதிவேண்டும்: பிரிட்டனில் பெருந்திரளாக ஒன்று திரண்ட தமிழர்கள்..!

காணாமல்போனோருக்கு நீதிவேண்டும்: பிரிட்டனில் பெருந்திரளாக ஒன்று திரண்ட தமிழர்கள்..!

சிறிலங்காவில் திட்டமிட்டு காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி உலக வாழ் மக்களால், சர்வதேச காணாமற்போனோர் தினம் (International Day of Enforced Disappearnce) அனுஷ்டிக்கப்பட்டது.

உலகிலுள்ள பல நாடுகளிலும் காவல்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.

அதன் நிமித்தம் பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக நீதிகோரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இம்மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நீதிகோரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல்போனோருக்கு நீதிவேண்டும்: பிரிட்டனில் பெருந்திரளாக ஒன்று திரண்ட தமிழர்கள் | Justice For The Missing Persons Preotest In London

இந்த நிகழ்வுகளை மனித உரிமைகளுக்கான தமிழ் அமைப்பும், நாடுகடந்த தமிழீழ அரசும் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பொருட்டு சிறிலங்கா இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் பிரித்தானியாவின் Trafalgar Square இல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி Trafalgar Square சதுக்கத்தில் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதியன்று மாலை 5 மணி முதல் 8 மணி (5pm - 8pm) வரை அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பெருந்திரளான தமிழ் புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.