
நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஐந்தாவது நாடு
ஜப்பானின் விண்கலமான 'ஸ்லிம்' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜப்பான் விண்ணுக்கு ஏவியது.
நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் எனும் ஸ்மார்ட் லேண்டர் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம் உதவியுள்ளது.
இதனிடையே, நேற்று வெற்றிகரமாக ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டதுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் பரப்புக்குள் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் ‘நிலவின் ஸ்னைப்பர்’ என அழைக்கப்படுகிறது.
குறித்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டாலும் அதன் லேண்டர் விரைவாக சக்தியை இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
விண்கலத்தின் சூரிய மின்கலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், அதன் பணி முன்கூட்டியே முடிவடையும் என்ற அச்சம் உள்ளது.
எனினும், தற்போது லேண்டருடன் தொடர்பு கிடைத்துள்ளதாகவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது