
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்
யாழ் நகர் பகுதியில் தந்தையுடன் சென்ற இளைஞன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கடத்த முற்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் புதன்கிழமை இரவு (24) யாழ்.நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது தந்தையுடன் இளைஞன் பயணித்துக்கொண்டிருந்த வேளை , ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதோடு , தமது கைபேசியில் இளைஞனின் புகைப்படத்தை காட்டி , “இது நீ தானே ?” என வினாவியுள்ளனர்.
அதற்கு இளைஞன் ஆம் என்றதும் , இளைஞனை பிடித்து தமது மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டுள்ளனர். அதன் போது இளைஞனும் தந்தையும் , கடத்தல் கும்பலுடன் முரண்பட்ட போது பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதும், மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது.
தப்பியோடிய இருவரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து , தடுத்து வைத்திருந்து , யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். இதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இளைஞரை அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.
எனினும் தந்தையுடன் சென்ற இளஞரை எதற்காக கடத்த முறப்பட்டார்களென்ற தகவல் வெளியாகவில்லை.