
யாழ்ப்பாணத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் ஈருருளி போட்டி
இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் 'நட்பின் சிறகுகள்' என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியான திட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கை விமான படையின் 73வது ஆண்டு நிறைவின் முதற்கட்ட நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஆரப்பிக்கப்படவுள்ளது.
இதற்காக 125 மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான நிதி, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 73 பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக இனங்காணப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்
சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்களின் ஆரம்ப பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 25 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் பாடசாலைகளுக்கு 73 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த திட்டங்களுக்காக அரச நிதி பயன்படுத்தப்படவில்லை எனவும், நன்கொடையாளர்களிடமிருந்து மாத்திரமே நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, ஆண்களுக்கான 650 கிலோமீற்றர் தூர ஈருருளி போட்டியும் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த ஈருருளி போட்டி மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி காலி முகத்திடலில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பெண்களுக்கான போட்டி வவுனியாவில் இருந்து, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரையில் 100 கிலோமீற்றர் என்ற தூர அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனையடுத்து விமானப்படையானது மார்ச் 6 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது.
இதன்போது, இந்திய விமானப்படை மற்றும் விமானப்படை உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவி உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை விமானப்படையின் தளபதி உதேனி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.