குலுக்கலில் பணப்பரிசு கிடைக்கும் என நம்பிய யாழ் வாசியின் வங்கிக்கணக்கில் பணம் திருட்டு

குலுக்கலில் பணப்பரிசு கிடைக்கும் என நம்பிய யாழ் வாசியின் வங்கிக்கணக்கில் பணம் திருட்டு

தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், 55000 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக வந்த தகவலை நம்பியவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதும் பறிபோன சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு , தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் , தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி , தமது நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு 55000 ரூபாய் பணம் விழுந்துள்ளது. அந்த பணத்தினை பெறுவதற்கு உங்கள் வங்கி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளதுடன் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும் இரகசிய குறியீட்டு இலக்கத்தையும் தங்களுக்கு அனுப்பிவைக்குமாறும் கோரியுள்ளார்.

அதனை நம்பிய குறித்த நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபருக்கு விபரங்களை அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபரின் வங்கி கணக்கில் இருந்த 14,000 ரூபாய் பணம் வெட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது , அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதனை அடுத்து , குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கும் வங்கிக்கும் சென்று , விசாரித்த போதே , தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல்வேறு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போலித் தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.