
யாழில் சட்டவிரோத கடற்தொழில்...அதிரடியாக அறுவர் கைது!
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி யாழ்ப்பாணம் (Jaffna) சாலை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் நிகழும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா கடற்படையினரால் ( SrilankaNavy) நாட்டின் கரையோரப்பகுதிகளில் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், வடக்கு கடற்படை கட்டளையின் வெற்றிலைக்கேணி கடற்படை பிரிவிற்குட்பட்ட சாலை கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான 03 படகுகள் சோதனையிடப்பட்டது.
இதன்போது அங்கீகரிக்கப்படாத கடற்தொழில் சாதங்களைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து படகில் இருந்த 06 சந்தேக நபர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல், கடற்தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட 03 படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்தொழில் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தலைமன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், 06 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.