
யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி
யாழில் (jaffna) அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் (Jaffna) - கரவெட்டி பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 10 இலட்சம் ரூபாவும், கடந்த 2024 தை மாதமளவில் 7 இலட்சம் ரூபாவும் போலியாக கூட்டறிக்கை தயாரித்தும், கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்தும் நெல்லியடி வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை, இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர், பொருளாளர் தாமாகவே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மோசடி தொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரச முத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டபோது போலி இறப்பர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.