
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜான் ஹியூம் காலமானார்!
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், வடக்கு அயர்லாந்தின் பிரபல அரசியல்வாதியுமான ஜான் ஹியூம் (John Hume), 83 வயதில் காலமானார்.
‘வடக்கு அயர்லாந்து சமாதான முன்னெடுப்பின் சிற்பி’ என வர்ணிக்கப்படும் ஜான் ஹியூம், நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், லண்டன்டெர்ரி மருத்துவனையில் உயிரிழந்தார்.
மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக வடக்கு அயர்லாந்தில் மிக உயர்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த ஜான் ஹியூம், அங்கு வன்முறைகளின் போது அமைதியான, ஜனநாயக அரசியலுக்கான உறுதியான அர்ப்பணிப்புக்காக பரவலாக பாராட்டப்பட்டார்.
1970இல் சமூக ஜனநாயக மற்றும் தொழிலாளர் கட்சியின் (எஸ்.டி.எல்.பி) ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அரசியல்வாதி ஜான் ஹியூம், 1979ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை கட்சியை வழிநடத்தினார்.
1998ஆம் ஆண்டு புனித வெள்ளி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹியூம் முக்கிய பங்கு வகித்தார்.
சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட கடந்த கால மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஜான் ஹியூமின் இழப்பு குறித்து டோனி பிளேர் கூறுகையில், ‘ஜான் ஹியூம் ஒரு அரசியல் டைட்டன்;. எதிர்காலம் கடந்த காலத்தைப் போலவே இருக்க வேண்டும் என்று நம்ப மறுத்த ஒரு தொலைநோக்கு பார்வையாளர்.
வடக்கு அயர்லாந்தில் அமைதிக்கு அவர் செய்த பங்களிப்பு காவியமானது. அதற்காக அவர் சரியாக நினைவில் வைக்கப்படுவார்’ என கூறினார்.
அமைதியான வழிமுறைகளால் ஐரிஷ் ஒற்றுமையைத் தொடர தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர், ஜெர்ரி ஆடம்ஸுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தியதற்காக கடுமையாக விமர்சிக்கவும்பட்டார்.
1998ஆம் ஆண்டில், ஹ்யூம் மற்றும் அவரது ஒன்றிய பிரதிநிதி டேவிட் டிரிம்பிள் ஆகியோருக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது