
லெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.
லெபனான் தலைநகரை உலுக்கிய குறித்த சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 4000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து படிப்படியாக மீண்டு வந்த லெபனானில் ஏற்பட்டுள்ள குறித்த சம்பவமானது, அந்நாட்டினை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் ஒளன், குறித்த தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமற்று ஆறு ஆண்டுகளாக உர வகைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரைட் வேதிப்பொருட்கள் ஏறக்குறைய 2750 டண் அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.