
யாழில் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்திய நபர் கைது!
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நபர் ஒருவர் தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,வீட்டிற்கு தினமும் மதுபோதையில் வரும் நபர் பெண் பிள்ளைகள் இருக்கும் அயல் வீட்டாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், அயல் வீட்டாரை அச்சுறுத்தி அநாகரிக செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர் ஈடுபடுவதால் உயிருக்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை எடுக்குமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.
இதனையடுத்து இன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.