பாரிய குண்டுவெடிப்பால் 10 வருடங்கள் பின்தங்கிய லெபனான் -மூன்று இலட்சம் மக்கள் நடுத்தெருவில்

பாரிய குண்டுவெடிப்பால் 10 வருடங்கள் பின்தங்கிய லெபனான் -மூன்று இலட்சம் மக்கள் நடுத்தெருவில்

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் 2750 தொன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட போர்களை விடவும் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்திலிருந்து பெய்ரூட் நகரம் மீண்டுவர பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஐந்து பில்லியன் டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கூறியதாவது; பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.