
மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்டுள்ள ஆண் ஒருவரின் சடலம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, நேற்றையதினம்(28) மீட்கப்பட்டுள்ளது.
சடலத்துடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சம்பவதினமான நேற்று திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில்; மோட்டார் சைக்கிளுடன் கீழ் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பயணம் செய்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.