
வெளிநாட்டில் தாய் - வீட்டுக்குள் கொலை செய்யப்பட்ட தந்தை! தப்பியோடிய 19 வயது மகள்
இரத்தினபுரி, கலவான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் வீட்டிற்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நாவலகந்த, ஹெட்டிகந்தவத்த பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரின் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், ஒரு மகள் திருமணமாகி தனியாக வசித்து வருவதாகவும், அவர் தனது 19 வயது மகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
19 வயது மகள் தற்போது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி தனியார் பயிற்சி நிறுவனத்தில் செவிலியராக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்யவிருந்த இளைஞன் சுமார் 2 நாட்களாக அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் அதற்கு பதிலளிக்கவில்லை. இதனால் காதலியை தேடி இளைஞன் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால், அந்த இளைஞன் சுற்றியுள்ள மக்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார். பின்னர், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
பொலிஸார் நடத்திய தேடுதலின் போது, உயிரிழந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் தூங்கிக் கொண்டிருந்தபோது கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, அந்த நபரை மகள் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க கலவான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.