
கொழும்பில் இளம் பெண்ணை தகாத முறையில் புகைப்படம் எடுத்தவருக்கு கிடைத்த தண்டனை
பொரளையில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணை தகாத முறையில் கையடக்க தொலைபேசியில் படம் பிடித்ததற்காக இளைஞனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து 20 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
50,000 இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த நபருக்கு இந்த அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பணியிடத்திற்குச் செல்வதற்காக பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பேருந்தில் சென்ற வேளையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
குற்றவாளியான நபர் தன்னை இரகசியமான முறையில் புகைப்படம் எடுத்ததாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை கோரினார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது, நீண்ட விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.