
யாழ். கொழும்பு தொடருந்தில் நடுவழியில் கோளாறு - அந்தரித்த பயணிகள்
யாழ்ப்பாணத்துக்கும் (Jaffna) கொழும்புக்கும் இடையேயான இரவு நேர அஞ்சல் தொடருந்தின் இயந்திரம் செயலிழந்தமையால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பயணிகள் நேற்று (10.08.2025) இரவு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நேற்று இரவு காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணியளவில் யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தை அடைந்து பின்னர் கொழும்பு நோக்கித் தமது சேவையை, அஞ்சல் தொடருந்து ஆரம்பித்திருந்தது.
எனினும் பரந்தன் கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் இயந்திரம் செயலிழந்தது.
இதன் காரணமாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை பயணிகள் காத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாலை 12:30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த மற்றுமொரு இயந்திரம் மூலம் தொடருந்து, கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.