தமிழ் மக்களுக்கு நன்றி - மாவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

தமிழ் மக்களுக்கு நன்றி - மாவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியை பெற்றிருக்கிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயங்களை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

வரலாற்றில் தமிழ் மக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தினாலும், போர்களினாலும், இனக் கலவரங்களினாலும் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை.

5ஆம் திகதி பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுச் சூழலில் பெருமளவிலான அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தீவிர பிரசாரங்களிலும் ஈடுபட்டும், வேறுபட்ட தேர்தல் அறிக்கைகளையும், வர்த்தக ரீதியிலான பல சலுகைகளையும், வேலை வாய்ப்புக்களையும் முன்வைத்திருந்தன.

இருப்பினும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையையும் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதற்காக எம் தமிழ்த் தேச மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைக்கும், தமிழ் தேச விடுதலைக்கும் - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுவார்கள் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு தமிழரசுக் கட்சியின் உயர்பீடமும் (அரசியற் குழுவும்) மத்திய செயற்குழுவும் கூட்டப்பட்டு, தேர்தல் காலத்திலும் தேர்தல் காலத்திற்கு அண்மித்த காலப்பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் பூரணமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அடைந்த வெற்றி, ஏற்பட்ட இழப்புத் தொடர்பில் கூட்டமைப்பின் உயர்பீடம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், தேர்தல் தொடர்பில் கேள்வி எழாமலே வெளியிடப்பட்ட தன்னிச்சையான, கூட்டுப் பொறுப்பற்ற பத்திரிகை செய்திகள் மீண்டும் கட்சிகளுக்குள்ளும், மக்களிடத்திலும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

மிக விரைவில் - உரிய வேளையில் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி உயர்மட்டக் குழுவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவும் தனித் தனியே ஆராய்ந்து கூட்டாக முடிவை அறிவிக்கவுள்ளன.

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும்.

பொதுவெளியில் பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.