ஒவ்வாமை பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமி உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய குகனேசன் டினோஜா என்ற சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம்(21.12.2025) குறித்த சிறுமி மாட்டிறைச்சி உணவு உட்கொண்டதன் பின்னர் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமியின் தாயார் உடனடியாக சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பேசிக்கொண்டு சென்ற சிறுமி, குறித்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறுமி உயிரிழந்ததாக வைத்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில. சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.